இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

இருதயத்தை காத்துகொள்.... Protect your Heart

இருதயத்தை காத்துக்கொள்

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். - நீதிமொழிகள் 4:23).

இரண்டு விவசாய நண்பர்கள் இருந்தனர். அவர்களிடம் தரிசாய் போன விளைநிலம் இருந்தது. அந்த வருடத்தில் நல்ல மழை பெய்தது. அந்த நண்பர்கள்  நமது நிலத்தில் ஏதாவது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என பேசி கொண்டனர். தக்காளி பயிரிடலாம் என யோசித்து மறுநாளே அதற்குரிய வேலையை தொடங்கினர். விதைத்தனர், செடி சற்று வளர்ந்தது. முதல் விவசாயி தன் தோட்டத்தை சுற்றிலும வேலியடைத்தான்.

அவ்வப்போது வந்து செடியில் நடுவில் வளரும் களைகளை பறித்து போட்டான். ஒவ்வொரு நாளும் கவனமாய் நீர்ப்பாய்ச்சினான். இரண்டாம் விவசாயி, இவனுக்கு வேலையில்லை, இதற்கெல்லாம் வேலி போட்டு களை பிடுங்க வேண்டுமா, தண்ணீர் பாய்ச்சினால் போதாதா? என்று கிண்டலாக அவ்வப்போது முதல் விவசாயியிடம் கூறுவான். கனி தரும் காலம் வந்தது.

இரண்டு தோட்டத்திலும் காய் காய்த்து குலுங்கியது. தினமும் மாலை இருவரும் தோட்டத்தை பார்வையிடும்போது இரண்டாம் விவசாயி 'நான் வேலி அடைக்கவில்லை, களை பிடுங்கவில்லை, ஆனாலும் என்னுடைய தோட்டமும் நன்றாக காய்த்திருக்கிறதுதானே, நீ வேலி அடைத்து உன் பணத்தையும், களை பிடுங்கி உன் நேரத்தையும் வீணாக்கி விட்டாய். நீ வெட்டி வேலை செய்திருக்கிறாய்' என்று ஏளனம் செய்தான். 'தக்காளிகளெல்லாம் நன்றாக முற்றி விட்டது. நாளை பறித்தால் சரியாக இருக்கும். ஆகவே நாளை காலையிலேயே இவற்றை பறித்து சந்தையில் போய் போடுவோம்' என்று பேசி கொண்டார்கள்.

சாக்குகளோடு மறுநாள் அதிகாலமே தோட்டத்திற்கு வந்தனர். வேலியடைக்காத தோட்டத்திலுள்ள காய்கள் எல்லாம் பறிக்கப்பட்டு தோட்டமே அலங்கோலமாக கிடந்தது. காரணம் யாரோ நெடுநாளாய் இந்த தோட்டததை கவனித்து வந்துள்ளனர். பறிக்க சரியான நோம் பார்த்திருந்தனர். வேலியும் இல்லாததால் எந்த சிரமுமின்று பறித்து சென்று விட்டனர். இதை கண்டவுடன் இரண்டாவது விவசாயிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. துக்கத்தோடு திரும்பி சென்றான்.

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும் என்று வேதம் சொல்கிறது. நம் இருதயத்தை எப்படி காத்து கொள்வது? கர்த்தருடைய வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து சோதனை வரும்போதும், பிரச்சனைகள் வரும்போதும் அவற்றை உபயோகித்து, நம்மை காத்து கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து நாற்பது நாள் இரவும் பகலும் உபவாசிமிருந்து முடித்த போது, அவருக்கு பசியுண்டான நேரத்தில் பிசாசானவன் வந்து அவரை சோதித்தான். கல்லுகளை அப்பங்களாகும்படி சொல்லும் என்று அவரிடம் ஆசை காட்டினான்.  

அவரால் அப்படி முடியுமென்றாலும், அப்படி செய்யவில்லை. கர்த்தருடைய வார்த்தைகளினால் அவனை வென்றார். 'மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே' என்று கூறி அந்த சோதனையையும், மற்ற சோதனைகளையும் கர்த்தருடைய வார்த்தைகளை பேசி பிசாசானவனை வென்றார்.

நாம் கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகுகிறவர்களாய், கர்த்தரை அதிகமாய் நேசிக்கிறவர்களாய் இருக்கும் பட்சத்தில் நம்மை கேலி செய்கிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஜெபித்த உனக்கும் நல்ல வேலை, ஜெபிக்காத எனக்கும் நல்ல வேலை, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்வார்கள். அப்படி கேலி செய்பவர்களின் வாழ்க்கையை வெளியரங்கமாக பார்த்தால் எல்லாமே நன்றாக இருப்பதை போலத்தான் தெரியும். ஆனால் பலன் கொடுக்கும் காலம் ஒன்று உண்டு. அன்று நாம் கெம்பீரமாய் அறுவடை செய்யலாம்.

சோர்ந்து போகாதிருங்கள். சங்கீதக்காரனாகிய ஆசாப் 73-ம் சங்கீதத்தில், அப்படிப்பட்ட பரியாசம் செய்யும் துன்மார்க்கரின் மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை, அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது என்று அவர்கள் மேல் பொறாமை கொண்டேன் என்று கூறும் ஆசாப், நான் விருதாவாகவே என் இருதயத்தை சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளை கழுவினேன் என்று கூறுகிறார். ஆனால் அவர்கள் முடிவை அவர் பார்த்தபோது, 'நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்' என்று ஆச்சரியத்தோடு கூறுகிறார்.

நல்ல அறுவடையை பெற்று கொண்ட விவசாயி தோட்டத்தை சுற்றி வேலியடைத்ததை போல நாமும் நம் இருதயத்தை கர்த்தருடைய வசனம் என்னும் வேலியினால் காத்து கொள்வோம். அதனிடத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படும். அநேகர் நம்மை பார்த்து ஆச்சரியப்படும்படியாக நம்மை தேவன் உயர்த்துவார்.  கர்த்தரை பின்பற்றி தீமைக்கு விலகி ஜீவிக்கும் நமக்கு, உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் என்று நம்பிக்கையுடன் நாம் நம்மை சுற்றிலும் வேலியடைத்து, கர்த்தருக்குள் ஜீவிப்போம். அப்பொழுது தேவனே நடத்தி முடிவில் நம்மை ஏற்று கொள்வார். ஆமென்,  அல்லேலூயா!

நன்றி பரலோகத்தின் வாசல் ஊழியங்கள்

Post a Comment

0 Comments