இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

ஈடு இணையற்ற பிரசங்யார் மூடி

ஈடு இணையற்ற மூடி பிரசங்கியார்

மூடி தமது வாழ்வில் ஒரு புத்தகம் கூட எழுதவில்லை. அவருடைய சுவிசேஷ பிரசங்கங்கள், வேதாகம புருஷர்களைக் குறித்து அவர் கொடுத்த செய்திகள், வேதாகம சத்தியங்களைக் குறித்த பாடங்கள், தியானங்கள் எல்லாம் அவருடைய வாய்ப் பேச்சிலிருந்து மட்டுமே எடுத்து எழுதப்பட்டவையாகும். "மூடியின் மட்டான ஆங்கில மொழி அறிவு, அவரது பேச்சு நடையிலுள்ள குறைபாடுகளை அறிந்து அவரது தேவச் செய்திகளை நிறைவான ஆங்கில சுவையோடும், மூடி பக்தனுக்கு நான் செய்யும் பரிசுத்த தொண்டாகவும் கருதி அவரது பேச்சுக்களை புத்தகங்களாக வடித்தெடுத்தேன்" என்கின்றார் ஃபிட் என்ற தேவ மனிதர். இப்படி அச்சிடப்பட்டு வெளி வந்த ஒவ்வொரு புத்தகத்தையும் அது அச்சேறுவதற்கு முன்னர் மூடி தன் மட்டாக முழுமையாக வாசித்து அது அச்சிட அனுமதியளித்து தமது கையெழுத்தைப் போட்டார்.

மூடியின் புத்தகங்கள் உலகம் முழுமையையும் சுற்றி வந்துள்ளன. பரிசுத்த வேதாகமம் மற்றும் ஜாண் பன்னியன் என்பவர் எழுதிய மோட்ச பிரயாண நூலுக்கு அடுத்த படியாக மூடியின் புத்தகங்கள் உலகம் முழுவதிலுமுள்ள அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. "எனது புத்தகங்கள் தேசாதேசங்களில் ஒரு பெரிய ஆவிக்குரிய அசைவை நிச்சயமாக கொண்டு வரும் என்று கர்த்தரில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்" என்று 1896 ஆம் ஆண்டு மூடி எழுதினார்.

சிக்காகோ நகரிலுள்ள ஒரு தேவ மனிதர் "மூடி இந்த அமெரிக்க தேசத்தின் ஒரு முனை தொடங்கி அதின் மறுமுனை வரை சுற்றி நடந்து தேசத்தின் திரள் கூட்டத்தினரை மாயையான பூமிக்குரிய காரியங்களிலிருந்தும், செல்வம், செழுமை போன்றவற்றைத் தேட வேண்டுமென்ற பேராசையிலிருந்தும் விலகி ஒதுங்கி ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்ள பிரயாசப்படவேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார் என்று கூறுகின்றார்.

1893 ஆம் ஆண்டு முதல் 1899 ஆம் ஆண்டு வரை மூடி வட அமெரிக்காவின் கனடா தேசம் முதல் மெக்ஸிகோ வரை தமது சுவிசேஷ ஊழியங்களை நிறைவேற்றினார். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் அவர் பிரசங்கியாத நாடே இல்லை. எந்த ஒரு இடத்திலும் அவர் பல மாதங்கள் தங்குவதில்லை. நியூயார்க் மற்றும் பாஸ்டன் பட்டணங்களில் மட்டுமே 1896-1897 குளிர் காலத்தில் சற்று கூடுதலான காலம் அவர் தங்கும்படியாக நேரிட்டது. ஒவ்வொரு இலையுதிர் காலமும் மூடி நார்த்ஃபீல்டிலுள்ள தமது பிறந்த வீட்டிற்குச் சென்று தமது கிறிஸ்மஸ் காலத்தை அங்கு களிப்பது வழக்கம்.

"அவருடைய பிரயாணங்களில் அவர் தனது கஷ்டங்களில் தனது உடல் வலிமையை பயன்படுத்த வேண்டியதாக இருந்தபோதினும் அவர் அந்தச் சமயங்களில் சிரிக்கத்தான் செய்தார்" என்று அவரோடு பிரயாணம் செய்த பால் என்பவர் எழுதுகின்றார். மூடி சற்று வசதியாக இருக்க ஆசைப்படுவாரே தவிர ஆடம்பரத்தை அவர் ஒருக்காலும் விரும்புவதில்லை என்று தெரிகின்றது. தேவ ஊழியங்களுக்குச் செல்லும் இடங்களில் சிறிய ஹோட்டல்களிலேயே அவர் தங்கினார். ஆங்காங்கு செல்லும்போது ஜனக்கூட்ட நெரிசல்கள் அவருக்கு சற்று கோபத்தைக் கொடுக்கவே செய்தது. சுமை தூக்கும் போர்ட்டர்களிடம் அவர்களுடைய செயல்களுக்காக மூடி சற்று கோபப்பட்டாலும் அதற்காக அவர் பெரிதும் மனம் வருந்தினார். "நான் எனக்குள்ளாக மிகவும் வெட்கம் அடைகின்றேன்" என்று அவர் கூறுவார். "இந்தப் போர்ட்டர்களில் யாராவது என்னை அறிந்திருந்தால் என்ஆண்டவருடைய நாமம் என்னால் கனவீனம் அடையுமே" என்று அவர் புலம்புவார்.

ஒரு சமயம் மூடியும் அவருடைய கூட்டங்களில் பாட்டுப்பாடும் டவுனர் என்பவரும் ரயிலில் ஒரே பெட்டியில் பிரயாணம் செய்து சென்று கொண்டிருந்தனர். அந்த பெட்டியில் ஒரு குடிகார மனிதன் நன்கு குடித்து வெறித்து தன் கண்களில் ஒன்றின் அருகிலே காயத்தை எப்படியோ உண்டாக்கி வைத்து அமர்ந்திருந்தான். அவன் மூடியை அடையாளம் கண்டு கொண்டு மூடியின் கூட்டங்களில் பாடப்படும் பாட்டுகளை முணு முணுக்க ஆரம்பித்தான். "வாருங்கள், நாம் அடுத்த பெட்டிக்குப் போய்விடலாம்" என்று கூறி மூடி தனது பாடகர் டவுனரை அழைத்தார். எல்லா பெட்டிகளும் நிரம்பி வழிவதால் நாம் இந்த பெட்டியிலேயே இருந்துவிடுவோம் என்று டவுனர் சொல்லவே இருவரும் அதே பெட்டியில்தான் அமர்ந்து கொண்டனர். சற்று நேரத்துக்கெல்லாம் ரயில் பெட்டியின் கண்டக்டர் வந்தார். மூடி அவரிடம் அந்தக் குடிகார மனிதனை சுட்டிக் காண்பித்தார். கண்டக்டர் அந்த குடிகார மனிதனை கீழே இறக்கி விட்டுவிடுவார் என்று மூடி நினைத்தார். ஆனால் நடந்தது வேறு. அந்த மனிதனை தன்னுடன் அழைத்துச்சென்ற அந்த கண்டக்டர் அவனுடைய கண்ணின் காயத்தைக் கழுவி மருந்து போட்டு திரும்பவும் அதே பெட்டியில் கொண்டு வந்து விட்டுச் சென்றான். சிறிது நேரத்திற்குள்ளாக அந்தக் குடிகார மனிதன் ஆழ்ந்து தூங்கியும் விட்டான்.

"டவுனர் இது எனக்கு ஒரு பயங்கரமான கடிந்து கொள்ளுதலாகும். நேற்று இரவு நான் அந்தக் கூட்டத்தினருக்கு பரிசேயத்தின் மாய்மாலத்தை குறித்து பேசி நல்ல சமாரியனை புகழ்ந்து பிரசங்கித்தேன். பாருங்கள், இந்தக் காலை வேளையில் அதை எனது வாழ்வில் நடைமுறைப்படுத்திக் காண்பிக்க தேவன் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தார். நான் பிரசங்கித்ததை எனது வாழ்வில் செயல்படுத்திக்காட்ட இயலாமல் எனது இரண்டு கால்களையும் காயப்படுத்திக் கிடந்த மனிதனை கண்டு கொள்ளாமல் அப்பால் விலகிச் சென்ற ஆசாரியன், வேவியனுடைய சப்பாத்துக்குள் நன்கு நுழைத்துவிட்டு மாட்டிக் கொண்டேன்" என்று துக்கத்தோடு கூறினார்.

"எரியும் விளக்கைச் சுற்றி விட்டில் பூச்சிகள் மற்றும் பக்கிகள் மொய்ப்பது போல தேவ பக்தன் மூடியை சுற்றி மக்கள் மொய்த்து நின்றனர். அவரை நெருங்கி அவர் அருகில் நிற்பதற்காக மக்கள் நொண்டி சாக்குப் போக்குகளைக் கூறினர்" என்கின்றார் காஸ் என்பவர். மூடி மக்களை கவர்ந்து இழுப்பதைப் பார்த்தால் அவரிடம் ஏதோ ஒரு கவர்ச்சித்து இழுக்கும் காந்த சக்தி இருக்கும் என்று நினைத்து மேற்கண்ட காஸ் என்பவர் மூடியிடம் அது குறித்து கேட்டார். மக்கள் என்னிடம் பெருந்திரளாக வருவது என்னிடமுள்ள கவர்ச்சித்து இழுக்கும் ஒரு வித காந்த சக்தியாக இருக்குமானால் நாளை தினமே நான் எனது பிரசங்கத்தை நிறுத்திவிடுவேன். என்னிடம் ஒரு வல்லமை இருக்குமானால் அது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்த ஒன்றேயாகும்" என்றார் மூடி.

மூடி தமது பிரசங்கத்தில் சம்பவங்களை விளக்குவது கேட்கப் பரவசமாக இருக்கும். டெட்ராய்ட் என்ற இடத்தில் மூடியுடைய பிரசங்கத்தை கேட்ட கிராஸ் என்பவர் இவ்வாறு கூறுகின்றார்:-

"அன்று அவர் எலியாவைக் குறித்துப் பேசினார். அவர் காரியங்களை விளக்கிக் காட்டினபோது அந்தப் பண்டைய கால சம்பவம் நாங்கள் கூடியிருந்த அறையிலேயே நடந்து கொண்டிருப்பதைப் போல எங்களுக்குத் தெரிந்தது. இறுதியில் வானத்திலிருந்து அக்கினி ரதம் தரை இறங்குவதையும், கிழ தீர்க்கனான எலியா அதில் ஏறுவதையும் அதையடுத்து அக்கினி ரதம் காற்றடங்கிய அந்த அமர்ந்த நேரத்தில் விண்ணை நோக்கிக் கிளம்புவதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவே மூடி பிரசங்கியார் தனது திறமையான பேச்சாற்றலால் "என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாக இருந்தவரே" என்று கூறிய போது கூட்டத்தில் நிலவிய பரிசுத்த பரவச நிலையை தாங்கிக் கொள்ள இயலாததாக இருந்தது" என்கின்றார்.

வருடங்கள் பல கழிந்தாலும் மூடியின் குரல் கணீரென்று இருந்தது. பிரசங்க நாட்களில் கருமையும், அழுத்தமுமான நீல நிற கால் சட்டைகளை அவர் அணிந்தார். தன்னுடைய கடிகாரத்தின் நீண்ட சங்கிலி, தனது நீண்ட சட்டையின் மணிக்கட்டுப் பாகத்தில் கட்டப்பட்டிருக்கும். சிறிய தங்க சங்கிலி எதையும் அவர் அணிவதில்லை. மக்களுடைய கவனத்தை அவைகள் திசை திருப்பிவிடக்கூடாது என்று அவர் பயந்தார்.

மூடிக்கு ஏராளமான கடிதங்கள் வருவதுண்டு. அவர் எங்கு கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் அவைகள் அங்கு அனுப்பப்பட்டு விடும். "அவருடைய பேனா, தொடர்ச்சியாக ஆயத்த நிலையிலேயே இருக்கும்." என்று பெர்சிஃபிட் என்பவர் குறிப்பிடுகின்றார். பெர்சிஃபிட்மூடிக்கு காரியதரிசியாக இருந்தவர். "எந்த ஒரு நிலையிலும் சுருக்கெழுத்தாளர்களுக்கு அவற்றைக் கொடுப்பதே இல்லை" என்கின்றார் அவர். "மூடி தனது கடிதங்கள் ஒவ்வொன்றையும் தானே தனது கைப்பட திறந்து முக்கியமான கடிதங்களுக்கு உடனே பதில் எழுதி விடுகின்றார். சற்று முக்கியத்துவம் இல்லாத கடிதங்களை தனது மனைவியிடம் கொடுத்து அவர்களை பதில் கொடுக்கக் கேட்கின்றார். இன்னும் முக்கியமில்லாத கடிதங்களை தனது குடும்பத்திலுள்ள ஒரு பயபக்தியான அங்கத்தினரிடமோ அல்லது பாடகர் குழுவிலுள்ள ஒருவரிடமோ அல்லது ஒரு நண்பனிடமோ கொடுத்து பதில் எழுதச் சொல்லுகின்றார். யாராவது அவரிடம் நான் இந்த கடிதத்துக்கு என்ன எழுதுவது என்று கேட்டால் மிகவும் தமாஷாக தனது மூக்கு கண்ணாடிக்கு ஊடாக அந்த நபரைப் பார்த்த வண்ணமாக "பதில் எழுதும்படியாக உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். நாயை வாடகைக்கு வாங்கிவிட்டு குரைக்கும் வேலையை நான் செய்வது போல இருக்கின்றது" என்று பேசுவார் என்பதாக அவருடைய நண்பர் பால் என்பவர் கூறுகின்றார்.

ஒரு கடிதம் வாசிக்கப்பட்டு பதில் கொடுக்கப்பட்டு ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டால் அத்துடன் அந்த காரியம் முடிந்தது. அவர் ஒருக்காலும் காலம் தாழ்த்தமாட்டார். அவருடைய மனம் குழப்பம் அடைவதே இல்லை. ஏமாற்றங்கள், பொருளாதார தேவைகள், இருண்ட சூழ்நிலைகள் போன்றவற்றிலும் அவர் தனது விசுவாசத்தைக் காத்துக் கொண்டு தைரியத்தோடு இருப்பார். அவருக்கு முன்பாக யாராவது தோல்வியுற்ற நிலையிலும், சோர்ந்து போன விதத்திலும் காணப்படுவதை அவர் விரும்பமாட்டார். அவர் எப்பொழுதும் ஜெபிக்கிறவராகவே இருந்தார். எல்லா வாசல்களும் அடைபட்டாலும் மூடி ஜெபித்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஜெப ஜீவியம் எல்லாவற்றிலும் மேலாக திகழ்ந்தது. அவருடைய ஜெப ஜீவியம் என்னுடைய வாழ்வில் ஒரு ஆழமான முத்திரையை பதித்துவிட்டது" என்கின்றார் கேலார்ட் என்பவர்.

கடந்து சென்ற பல நூற்றாண்டுகளாக திருச்சபை தலைவர்கள் பொதுவாக அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு அல்லது பவுல் அல்லது யோவான் போன்றவர்களைப் போன்ற குணாதிசயங்களை உடையவர்களாக வார்ப்பிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மூடி மேற்கண்ட மூன்று அப்போஸ்தலர்களின் குணநலன்களை ஒருமிக்க தன் வசம் பெற்றவர். பேதுருவைப் போன்ற துணிச்சல், நியாயமான துரித கோபம், முரட்டுத்தனமான மனுஷீகம், நிறைவான தேக பெலன் எல்லாம் அவருக்கு இருந்தது. பவுலைப் போன்ற ஒரே நோக்கம், சுவிசேஷத்தை விசாலமாக அறிவிப்பதில் பவுலுக்கு இருந்த திறமை, திருச்சபையைக்குறித்த உறுதியான நம்பிக்கை, பவுலைப்போன்ற துடுக்குத்தனம் எல்லாம் மூடிக்கு இருந்தது. பவுல் கற்றறிந்த ஞானியாக இருந்தார். ஆனால் மூடி அது ஒன்றில் மட்டும் குறைவுள்ளவராக காணப்பட்டார். யோவானுடைய அளவற்ற அன்பு அவருக்கு இருந்தது. அவரைப்போன்ற ஆவிக்குரிய பசி தாகம், ஜெப தியானத்தில் உறுதியான தொடர் வளர்ச்சி எல்லாம் மூடியிடம் இருந்தன.

Post a Comment

0 Comments