இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

ஜார்ஜ் முல்லர்.... GEORGE MULLER



ஜியார்ஜ் முல்லர் 1805 - 1898


("தன்னை
உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே
நோக்கிக் கொண்டிருக்கும்" (ஏசாயா 17 : 8 என்ற தேவ வாக்கின்படி இஸ்ரவேலின்
பரிசுத்தர் ஒருவரையே தன் வாழ் நாள் காலம் முழுவதும் நோக்கி, நோக்கி
பார்த்து தான் ஏறெடுத்த 50000 (ஐம்பதினாயிரம்) ஜெபங்களுக்கு பதிலைப்
பெற்றுக்கொண்ட தேவ பக்தன் ஜியார்ஜ் முல்லர் ஆவார். அந்த 50000 ஜெபங்களில்
30000 (முப்பதாயிரம்) ஜெபங்கள் 24 மணி நேரத்தில் கர்த்தரால் விடை
அளிக்கப்பட்டது என்று அவர் கூறுகின்றார். அநேக ஜெபங்கள் அவர் தனது
முழங்கால்களிலிருந்து எழும்பும் முன்னரே தேவனிடமிருந்து பதிலைப்
பெற்றுக்கொண்டது என்று சொல்லப்படுகின்றது. "இந்த உலகத்தில் எந்த ஒரு
மனிதனும் ஜியார்ஜ் முல்லர் தனது தேவைகளுக்கு என்னிடம் பணம் கேட்டார்" என்று
சொல்ல இயலாது என்று அவர் கூறுகின்றார். 10000 (பத்தாயிரம்) அநாதை
பிள்ளைகளை ஒரு நேர ஆகாரம் கூட அவர்களுக்கு தடையில்லாமல் தேவ ஒத்தாசையால்
போஷித்து அவர்களை நித்திய ஜீவ பாதையில் வழிநடத்திய உத்தம தேவ பக்தன் அவர்.
கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை 100 தடவைகள் தனது முழங்கால்களில்
நின்றும், 100 தடவைகள் நாற்காலியில் உட்கார்ந்தவாறும் வாசித்த தேவ பக்தன்.
வல்லமையான ஜெப மாந்தன். உலகம் முழுவதும் பல தடவைகளும் பிரயாணம் செய்து
கர்த்தர் ஒருவரையே முழுமையாக சார்ந்து ஜெபம், விசுவாசத்தின் மூலமாக நாம்
ஆண்டவருக்காக மா மாட்சியான காரியங்களை இன்றும் சாதித்து விடலாம் என்று
பறைசாற்றிய சிலுவை வீரர். அவர் தோற்றுவித்த "வேத ஞான ஸ்தாபனம்"
(Scriptural Knowledge Institution)
மூலமாக லட்சக்கணக்கான வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள், சுவிசேஷ பங்குகள்,
திரள் திரளான சுவிசேஷ கைப்பிரதிகள் உலகமெங்குமுள்ள தேவ ஊழியர்களுக்கு
இலவசமாக அனுப்பப்பட்டதுடன், அநேக மிஷனரிகளையும் பொருளுதவியினால்
தாங்கினார். அவர் ஒரு மாபெரும் கொடையாளி என்று அழைக்கப்படுகின்றார். அந்த
தேவ மனிதரின் வாழ்க்கை சரித்திரத்தை அதிகமான ஜெபத்தோடும், மிகுந்த
பிரயாசத்தோடும் மொழி பெயர்த்து சுருக்கமாக கீழே தந்திருக்கின்றேன்.
நீங்களும் அதை ஜெபத்தோடு வாசித்து அவருடைய பரிசுத்த வாழ்க்கையை தேவ
பெலத்தால் உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்)

"நீ ஆண்டவரோடு சஞ்சரித்துக் கொண்டிருப்பாயானால்,
அவருடைய சகாயத்தை எதிர்நோக்கி நீ காத்திருப்பாயானால் அவர் உன்னை
ஒருக்காலும் கைவிடார்"

"எனது ஒவ்வொரு நாளின் பிரதான பணி எனது ஆண்டவர்
இயேசுவோடு அதிகமாக உறவாடி மகிழ்வதேயாகும். எனது முதன்மையான எதிர்பார்ப்பு
நான் என் ஆண்டவருக்கு எப்படியாக தொண்டு செய்யலாம் என்பதல்ல, எனது
ஆவிக்குரிய உள்ளான மனுஷனை தேவனுக்கு முன்பாக எவ்விதமாக போஷித்து
பிரகாசிப்பிக்கலாம் என்பதே"

"தேவனுடைய வார்த்தையை எவ்வளவு குறைவாக நாம்
வாசிப்போமோ அவ்வளவு குறைவாகவே நாம் அதை வாசிக்கவும் விரும்புவோம். எவ்வளவு
குறைவான நேரம் நாம் ஜெபிப்போமோ அவ்வளவு குறைவாகவே நாம் ஜெபிக்கவும்
விரும்புவோம்"

"ஒரு தேவ ஊழியனுக்கு ஒரே ஒரு எஜமானன் மட்டுமே
இருக்க முடியும். ஒரு தேவ ஊழியன் இந்த உலகத்தில் செல்வச்சீமானாகவும்,
சுகபோகியாகவும், பெரியவனாகவும், உலகத்தால் கனப்படுத்தப்படவும், மக்களால்
புகழப்படவும் மனதார ஆசை கொண்டிருக்கும் அதே வேளையில் அவனது எஜமானன்
ஏழையாகவும், புறக்கணிக்கப்பட்டவராகவும், அசட்டைபண்ணப்பட்டவருமாக இருப்பதில்
எந்த ஒரு அர்த்தமுமில்லை. அப்படியானால் அவனது எஜமானன் ஆண்டவர் இயேசுவல்ல,
உலக ராஜ்யங்களை காண்பித்து அதின் ஆளுகையை தேவ மைந்தனுக்கு வாக்களித்த
தந்திர சாத்தானேதான்"

"ஒரு ஏழை மனிதன் (ஜியார்ஜ் முல்லர்) தனது எளிமையான
ஜெபத்தாலும், விசுவாசத்தாலும் எந்த ஒரு தனி மனிதனையும் உதவிக்காக கெஞ்சிக்
கேட்காமல் ஒரு பெரிய அநாதை இல்லத்தை தோற்றுவித்து அதைச் சீரும் சிறப்புமாக
பல்லாண்டு காலமாக பராமரித்துக் கொண்டு செல்லுவானானால் இது ஒன்றே "தேவன்
இன்றும் உண்மையுள்ளவர்" என்பதற்கும் "தேவன் இன்றும் ஜெபத்தைக் கேட்கிறவர்"
என்பதற்கும் அப்பட்டமான அத்தாட்சியாகும்"

"நான் ஜெப ஆவியிலேயே ஜீவிக்கின்றேன். நான் நடந்து
கொண்டே ஜெபிக்கின்றேன். நான் படுத்திருக்கும்போதும், எழும்பும்போதும்
ஜெபிக்கின்றேன். எனது ஜெபங்களுக்கான பதில்கள் வந்தவண்ணமாகவே இருக்கின்றன.
ஆயிரங்கள், ஆயிரம் பதினாயிரம் தடவைகள் எனது ஜெபங்களுக்கு பதில்
கொடுக்கப்பட்டிருக்கின்றது. நான் ஜெபிக்கும் காரியம் கர்த்தருடைய பரிசுத்த
நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வரக்கூடியது என்பதை நான் நிச்சயித்துக்கொண்ட
மாத்திரத்தில் நான் அதற்கு விடை கிடைக்கும் வரை தொடர்ந்து ஜெபிக்கின்றேன்"

"நான் மரித்த ஒரு நாள் உண்டு" இந்த வார்த்தையை
ஜியார்ஜ் முல்லர் சொல்லும்போதுதானே அவர் அப்படியே மெதுவாக குனிந்து
குனிந்து தரையையே தொட்டுவிடுவார். அவர் தனது பேச்சைத் தொடர்ந்தவராக
"ஜியார்ஜ் முல்லருக்கு நான் மரித்தேன். அவனது வாஞ்சை விருப்பங்களுக்கும்,
அவனது எண்ணங்களுக்கும், அவனது கருத்துக்களுக்கும், அவனது நாட்டங்களுக்கும்,
அவனது சுயசித்தத்துக்கும் மரித்தேன். இந்த உலகத்துக்கு மரித்தேன். இந்த
உலகத்தின் நிந்தை அவமானத்துக்கு மரித்தேன். இந்த உலகத்தின் புகழ் ஆரவாரம்,
ஆர்ப்பரிப்புக்கு மரித்தேன். என் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவனாக நான்
என்னை அவருக்கு முன்பாக நிலைநிறுத்துவதையே கற்றுக் கொண்டேன்"

"நான் எனது அறைக்குள் பிரவேசித்து அங்கிருந்த
நாற்காலியில் எனது வேதாகமத்தை வைத்துவிட்டு, எனது அறையின் கதவை பூட்டிய
பின்னர் நாற்காலிக்கு அருகில் முழங்காலூன்றி சில மணி நேரம் ஆண்டவருடைய
வார்த்தைகளை தியானித்தேன். நான் இந்தவிதமாக மூன்று மணி நேரங்கள் ஆண்டவருடைய
பாதங்களில் கற்றுக்கொண்ட சத்தியத்தை வேறுவிதமாக பல மாதங்கள் செலவிட்டாலும்
கற்றுக் கொண்டிருக்க இயலாது என்று நான் உங்களுக்கு திட்டமாகச் சொல்ல
முடியும்"

"கடன் வாங்குவதைக் குறித்து நான் சொல்லும் தேவ
ஆலோசனை என்னவெனில், தேவனுடைய வாசற்படியைத் தாண்டி நாம் கடன் வாங்குவதற்காக
எந்த ஒரு மனிதனிடமும் செல்லத் தேவையில்லை. நம்முடைய தேவைகளை எல்லாம்
சந்திக்கப் போதுமான கர்த்தர் நமக்கிருக்கும்போது நாம் எங்கும் சென்று கை
ஏந்த காரணமே கிடையாது"

"எனது தேவ ஊழியங்களின் பிரதான குறிக்கோள்
என்னவெனில், பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலங்களுக்கு முன்னர் தேவன்
எப்படியிருந்தாரோ அதே வண்ணமாக இந்த 19 ஆம் நூற்றாண்டிலும் அவர் ஜீவிக்கின்ற
தேவனாகவும், தமது பிள்ளைகளின் ஜெபங்களுக்கு செவிசாய்த்து அவரை நம்புகிற
அந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யவல்ல கர்த்தராக இருக்கின்றார் என்பதை
நிரூபித்து காட்டவுமேதான்"

"தேவன் எனது ஜெபங்களுக்கு ஆச்சரியமான விதங்களில்
பதில் கொடுத்ததை வாசிக்கின்ற ஒரு மெய்யான விசுவாசி, மெய்யாகவே நான்
ஆண்டவருடைய பரிசுத்த பிள்ளைகள் அநேகரைக் காட்டிலும் ஆவிக்குள்ளாக ஒரு மேலான
நிலையில் உள்ளவன் என்றும் அதின் காரணமாகவே அவர் எனக்கு இவ்வண்ணமாக தயவு
பாராட்டினார் என்றும் நிச்சயமாக நினைக்கலாம். ஆனால், நான் உங்களுக்கு
உண்மையைச் சொல்லுகின்றேன், நான் தேவனுடைய சிந்தையை உணர்ந்து அவருடைய
சித்தத்தின்படி காரியங்களைச் செய்தேன். இதுவேதான் தேவன் என்னை
ஆசீர்வதித்ததும் அநேகருக்கு என்னை ஆசீர்வாதமாக வைத்ததின் இரகசியமுமாகும்"

இப்படி அநேக பரிசுத்த பொன் மொழிகளை உதிர்த்தவர்தான்
பரிசுத்தவான் ஜியார்ஜ் முல்லர் ஆவார். ஜியார்ஜ் முல்லர் ஜெர்மன் தேசத்தைச்
சேர்ந்த ஜெர்மானிய குடிமகனாவார். 1805 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம்
நாள் கிராப்பன்ஸ்டாட் என்ற ஜெர்மானிய கிராமத்தில் ஹெர் முல்லருக்கும்,
ஃபிரா முல்லருக்கும் மகனாக அவர் பிறந்தார். அவரது குழந்தை பருவ ஐந்து ஆண்டு
காலத்தைக் குறித்த செய்திகள் அதிகமாக நமக்குத் தெரியவில்லை. 1810 ஆம்
ஆண்டில் ஹெர் முல்லரின் குடும்பம் 4 மைல்கள் தொலைவுக்கு அப்பாலிருந்த
ஹீமர்ஸ்பென் என்ற இடத்திற்கு நகர்ந்து சென்று அங்கு குடியேறியது. அந்த
இடத்தில் ஹெர் முல்லர் ஜெர்மானிய அரசாங்கத்திற்கு சுங்கத் தீர்வை
வசூலிக்கும் கலெக்டராக பணி ஆற்றினார். அரசாங்கத்தின் விசேஷித்த சலுகைகளைப்
பெற்று அனுபவிக்கும் பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் தனி நபர்கள் அந்த
வரியை செலுத்த வேண்டும். அடுத்து வந்த 11 ஆண்டு காலங்களுக்கு ஹெர் முல்லர்
குடும்பத்தினர் அங்குதான் தங்கியிருந்தனர்.







சிறுவனாக இருந்தபோதே திருடனாக விளங்கிய முல்லர்




ஹெர் முல்லரின் கரங்களில் ஏராளமான பணம் புழக்கத்தில்
இருந்ததால் அவற்றை தனது ஆண் மக்கள் இருவருக்கும் தாராளமாகக் கொடுத்து பணத்தை
பற்றிய ஒரு ஆசை ஆவலையும், அதை சிக்கனமாக பாதுகாத்துக் கொள்ளும் ஒரு
மனப்பக்குவத்தை எதிர்காலத்தில் அவர்கள் அடைய வேண்டும் என்ற தாகத்தில்
கொடுத்தார். ஆனால் அவரது ஆவல் அவரது விருப்பத்திற்கு மாறாக பயங்கரமான எதிர்
விளைவுகளை கொண்டு வந்தது. "எனது தகப்பனார் தனது பிள்ளைகளை உலகப்பிரகாரமான
கண்ணோட்டத்தில் வளர்த்தார். அதின் அடிப்படையில் எங்களுக்கு அதிகமான பணங்களை
தந்தார். அதின் முடிவு என்னையும் எனது அண்ணனையும் பல பாவத் தவறுகளுக்கு
வழிநடத்திச் சென்றது. எனக்கு 10 வயது ஆவதற்கு முன்னரே நான் திரும்பத்திரும்ப
எனது தகப்பனாரின் வசத்திலிருந்த அரசாங்க பணத்தை திருடினேன். எனது திருட்டை
கண்டு கொண்ட என் தந்தை என்னை கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்காக கொஞ்சப் பணத்தை
மேஜையின் மீது எண்ணி வைத்துவிட்டு தனது பணிகளை கவனித்தார். நான் அதில் கொஞ்சம்
பணத்தை எடுத்து நான் அணிந்திருந்த எனது சப்பாத்துக்குள் மறைவாக வைத்துக்
கொண்டேன். பின்னர் தனது பணத்தை எண்ணிய என் தந்தை என்னை முழுமையாக தேடினார்.
இறுதியாக அவர் தனது பணத்தை எனது சப்பாத்துக்குள் கண்டு பிடித்து எடுத்துக்
கொண்டதுடன் என்னை நைய புடைக்கவும் செய்தார்" என்று ஜியார்ஜ் முல்லர் தமது
நாட்குறிப்பில் பின் நாட்களில் எழுதினார்.

தந்தை எவ்வளவு அடித்தாலும் முல்லர் தனது கெட்ட திருட்டுப் பழக்கத்தை
மாற்றுவதாகத் தெரியவில்லை ஒவ்வொரு தடவையும் தந்தை கண்டு பிடிக்க முடியாத புதிய
தந்திர வழிகளைப் பயன்படுத்தி தந்தையிடமிருந்த அரசாங்கப் பணத்தை திருடி வந்தார்.
"அப்பாவிடம் நன்கு அடிகளை வாங்கிக் கொண்டு அடுத்த முறை என்ன புது யுக்தியை
கையாண்டு கெட்டிக்காரத்தனமாக பணத்தை திருடலாம் என்ற நினைவேதான் எனக்கு வந்தது"
என்று முல்லர் எழுதுகின்றார்.

முல்லர் 10 க்கும் 11 க்கும் இடைபட்ட வயதில் இருந்தபோது அவருடைய தகப்பனார் அவரை
ஹால்பர்ஸ்டாட் என்ற இடத்திலிருந்த கலாசாலைக்கு கல்விக்காக அனுப்பி வைத்தார்.
வரும் நாட்களில் சர்வகலாசாலை படிப்புக்கு அந்த கல்வி பயனுள்ளதாக இருக்கும்
என்று அவர் நினைத்தார். "மகன் நன்றாக கல்வி பயின்று ஒரு லூத்தரன் திருச்சபை
குருவானவராக மாறவேண்டும். அந்த குருவானவர் தொழிலின் மூலமாக மகன் நல்ல ஆடம்பரமாக
வாழ்வில் எந்த ஒரு கஷ்டமின்றி வாழுவான். அத்துடன் எனது அந்திய காலத்திலும் எந்த
ஒரு தொந்தரவும் இல்லாமல் மகனுக்கு திருச்சபை கொடுக்கும் வசதியான பங்களாவில்
நானும் அவனுடன் அண்டிக் கொள்ளுவேன்" என்று அவர் நினைத்தார். மற்றபடி அன்பின்
ஆண்டவரை மகன் தனது குருத்துவ கல்வி மூலமாக மகிமைப்படுத்துவதை அவர் சற்றும்
நினைத்துக்கூட பார்க்கவில்லை.

தாயாரின் மரணமும் தனயனின் பாவ அகோரமும்


ஜியார்ஜ் முல்லரின் 14 ஆம் வயதில் அவரது அருமைத்
தாயார் மரணப்படுக்கையில் இருந்தபோது அவர்கள் திட்டமாக மரிக்கப் போகின்றார்கள்
என்பதை அறிந்திருந்தும் விடியற்காலம் 2 மணி வரை அவர் சூதாட்டம் ஆடினார். அதின்
பின்னர் தனது கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து மதுபானக்கடைக்குச் சென்று நன்றாக மது
அருந்தி தெருக்களில் தள்ளாடி தள்ளாடி சுற்றித் திரிந்தார். அவர் தனது அறைக்கு
திரும்பி வந்தார். அந்த நாட்களில் அவர் திடப்படுத்தல்
(confirmation) பெற்று
கர்த்தருடைய இராப்போஜன பத்தியில் சேர ஆயத்தமாக குருவானவருடைய பயிற்சி
வகுப்புகளில் சில நாட்கள் பங்கு பெற்றுக் கொண்டு வந்தார். அந்த பயிற்சி
வகுப்பு
அறைக்குத்தான் முல்லரின் தந்தை ஹெர் முல்லர் வந்து மகனுடைய வருகைக்காக
காத்துக்
கொண்டு நின்றார். "உனது தாயார் மரித்துப் போனார்கள். அவர்களின் அடக்க
ஆராதனைக்கு ஆயத்தப்படு" என்று தந்தை சொன்ன வார்த்தை முல்லருக்கு எந்த ஒரு
மன
துயரத்தையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. தாயார்,
ஞாயிற்றுக்கிழமை மரித்தார்கள். முல்லர், திங்கட்கிழமை திடப்படுத்தல் பெற்று கர்த்தருடைய
பந்தியில் பங்குபெற வேண்டும்.



முல்லர் எடுத்த திடப்படுத்தல் (Confirmation)



ஜியார்ஜ் முல்லர் திடப்படுத்தல் எடுப்பதற்கு மூன்று
அல்லது நான்கு நாட்களுக்கு முன்னர் குருவானவருக்கு திடப்படுத்தல் ஆராதனைக்காக
தகப்பனார் கொடுத்த காணிக்கையில் 12 பாகத்தில் 11 பாகத்தை தனக்கென்று மறைத்து
வைத்துக் கொண்டு ஒரு பாகத்தை மட்டுமே குருவானவருக்குக் கொடுத்தார். இறுதியாக
தேவாலயத்தின் குருவானவர் அறையில் இராப்போஜனம் பெறுவதற்கு முன்பாக பாவங்களை
அறிக்கையிடும் போது கூட தனது திருட்டை அறிக்கையிடாமல் மறைத்துக் கொண்டார்.
"இந்தவிதமான கறைப்பட்ட இருதயத்துடன் எந்த ஒரு ஜெப தபமுமில்லாமல், பாவங்களுக்காக
பட்சாதாபமுமில்லாமல், தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை குறித்த சிறிதளவேனும்
அறிவில்லாமல் நான் திடப்படுத்தல் பெற்று எனது முதலாவது இராப்போஜனத்தை 1820 ஆம்
ஆண்டு கர்த்தர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினத்தன்று எடுத்தேன்" என்று முல்லர்
எழுதுகின்றார்.

"எனது பாவச் செயல்களிலிருந்து விடுபட எத்தனையோ நல்ல தீர்மானங்களை நான்
எடுப்பேன். தேவனைப்பற்றிய பயமோ அல்லது அவரை கனவீனப்படுத்தக் கூடாது என்ற எண்ணமோ
எனக்கு இல்லாத காரணத்தால் வெகு துரிதமாகவே எனது தீர்மானங்கள் ஒன்றுமில்லாமல்
போய் முன்னைவிட இன்னும் அதிகமாக பாவச் செயல்களுக்குள் இறங்கினேன்" என்று
முல்லர் எழுதுகின்றார்.
பாவ சேற்றில் ஆழமாகச் சென்றதும் சிறை வாசம் அனுபவித்ததும்


அடுத்து வந்த ஆண்டில் ஜியார்ஜ் முல்லரின் தகப்பனார்
ஸ்கோன் பெக் என்ற இடத்திற்கு அரசாங்கத்தால் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அப்பொழுது அவர் தமது குமாரனை தமது ஊருக்கு அருகில் உள்ள மாக்டிபெர்க் என்ற
இடத்திலுள்ள கதீட்ரல் பள்ளியில் கல்வி பயிலுமாறு கேட்டுக் கொண்டார். பள்ளி
நவம்பர் மாதத்தில்தான் ஆரம்பிப்பதாக இருந்ததால் தங்கியிருந்த அவர்கள் வீட்டில்
நடைபெற வேண்டிய சில புதுப்பித்தல் வேலைகளை ஆட்களை வைத்து செய்து வந்தார்.
வீட்டில் தனிமையாக இருந்ததால் தனது கரங்களில் அந்த நாட்களில் தாராளமாகக்
கிடைத்த ஏராளமான பணங்களை அசுத்தமான நாவல்கள் வாங்கி வாசிப்பதிலும், சிற்றின்ப
பாவ இன்பங்களிலும், சூதாட்டங்களிலும், மது அருந்துவதிலும் முல்லர் மனங்குளிர
செலவிட்டார்.

1821 ஆம் ஆண்டு முல்லர் மாக்டிபெர்க் என்ற இடத்திற்கு பிரயாணப்பட்டுச்
சென்றார். அங்கு தங்கியிருந்த 6 நாட்களிலும் அவர் மிகுந்த பாவ வழிகளில்
செலவிட்டார். அதற்கான மிகுதியான பணத்தை அவர் பற்பலவிதமான தந்திரங்களிலும்,
ஏமாற்றுதல்களிலும், மாய்மால ஜாலங்களிலும் தன் கை வசப்படுத்தியிருந்தார். அதின்
பின்னர் அவர் அங்கிருந்து புரூன்ஸ்விக் என்ற இடத்திற்கு பயணப்பட்டுச் சென்று
ஒரு விலையுயர்ந்த ஆடம்பர ஹோட்டலில் ஒரு வார காலம் செலவிட்டார். கையிலிருந்த
பணம் எல்லாம் செலவாயிற்று. அவரிடம் பணம் இல்லை என்பதை கண்டு கொண்ட அவர்
தங்கியிருந்த ஹோட்டலின் முதலாளி முல்லரின் விலை மதிப்புள்ள ஆடைகளை தனது வசமாக
கைவசப்படுத்திக் கொண்டான்.

அதின் பின்னர் முல்லர் 6 மைல்கள் தூரம் நடந்து உல்ஃபன்பட்டல் என்ற இடத்திற்கு
வந்து அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினார். தன் வசம் நிறைய பணம் உண்டு என்ற
ஏமாற்றுத் தோரணையில் விடுதி உரிமையாளரிடம் நடந்து கொண்டார். ஒரு நாள்
விடுதியின் உயரமான ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிச் செல்ல முயன்றபோது
முல்லர் பிடிபட்டார். தனது தவறை முல்லர் ஒப்புக்கொண்ட போதினும் அவருக்கு
இரக்கம் காட்ட அந்த இடத்தில் எவருமே இல்லை. துரிதமாகவே அவர் கைது செய்யப்பட்டு
ஒரு போலீஸ் அதிகாரி முன்னர் நிறுத்தப்பட்டார். போலீஸ் அதிகாரிக்கும்
முல்லருக்கும் இடையே நடந்த சம்பாஷணையை கவனியுங்கள்.

"உன்னுடைய பெயர்?"

"ஜியார்ஜ் முல்லர்"

"வயது"

"பதினாறு"

"பிறந்த இடம், தேதி?"

"கிராப்பன்ஸ்டாட், ஜெர்மனி, செப்டம்பர் 27, 1805 ஆம் ஆண்டு"

"உல்ஃபன்பட்டல் என்ற இடத்திலுள்ள ஒரு விடுதியில் நீ பண வசதியுள்ளவன் போல
நடித்து இறுதியில் விடுதிக்காரருக்கு அவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல்
போனது உண்மைதானா?"

"உண்மைதான், ஆனால்........."

"அதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பதாக புரூன்ஸ்விக் என்ற இடத்திலுள்ள ஒரு
ஆடம்பர ஹோட்டலில் நீ தங்கியிருந்து ஹோட்டல் உரிமையாளர் பணம் கேட்டபோது அதை
கொடுக்க இயலாமல் அவர் உனது வஸ்திரங்களை எடுத்துக் கொண்டது உண்மைதானா?"

ஜியார்ஜ் முல்லர் தனது நிலையை பாதுகாக்க எந்த ஒரு வார்த்தையும் வாயில்
இல்லாதவராக அமைதியாக இருந்தார். அவர் இப்பொழுது முற்றும் ஓட்டாண்டி. ஒரு
செப்புக்காசு கூட அவரிடம் கிடையாது. மூன்று மணி நேரம் அந்த போலீஸ் அதிகாரி
முல்லரை விசாரித்த பின்னர், அவருடைய நீதிமன்ற விசாரணை எப்பொழுது என்ற எந்த ஒரு
விபரமும் அறிவிக்க இயலாமல் அவரை சிறைக்கூடத்தில் அடைக்க கட்டளையிடவே 2 போர்
வீரர்கள் அவரை சிறைக்கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.





நிர்ப்பந்தமான சிறைக்கூட வாழ்க்கை



1821 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஒரு
சிறைக்கூடத்தின் ஒரு சிறிய அறையில் ஜியார்ஜ் முல்லர் தனது முதல் இரவை செலவிட்டார். அந்த சிறிய அறையின் குறுகலான சிறிய ஜன்னல் பலமான கம்பிகளால்
தடுக்கப்பட்டிருந்தது. அந்த சிறிய ஜன்னல் வழியாகத்தான் கொஞ்ச ஒளி
சிறைக்கூடத்திற்குள் வரும். ஒரு சிறைக்கூட அறைக்கும் அடுத்த சிறைக்கூட
அறைக்கும் இடையே வலுவான மரக்கட்டைகளால் தடுப்பு ஏற்படத்தப்பட்டிருந்தது. அந்த
நாளின் இராத்திரியில் முல்லருக்கு கொஞ்சம் இறைச்சியும், ரொட்டியும் இரவு
ஆகாரமாகக் கொடுக்கப்பட்டது. அந்த இறைச்சியின் வாடை முல்லரை அருவருக்கச்
செய்ததால் அவர் அந்த ஆகாரத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லை. இந்த செயல் அந்த
ஆகாரத்தை தயாரித்த தலைமை சமையற்காரரின் மனதைப் புண்படுத்தவே அதற்கப்பால் அவன்
முல்லருக்கு ஆகார விசயங்களில் கருணை காட்டாமல் நடந்து கொண்டான். அடுத்த நாளும்
அதே ஆகாரம்தான் அவருக்கு பரிமாறப்பட்டது. மத்தியான ஆகாரத்திற்கு பச்சையான
ரொட்டியும், குளிர்ந்த இறைச்சியும், கொஞ்சம் காய்கறியும் கிடைத்தது. பசியின்
கொடுமை காரணமாக நான்காம் நாளிலிருந்து முல்லர் தனக்கு முன்பாக எதை வைத்தாலும்
சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டார். சிறைச்சாலை வார்டர் இரவும் பகலும் அவரை
அந்த சிறிய அறையிலேயே அடைத்து வைத்தான். அவருக்கு எந்தவித உடற்பயிற்சியும்,
வெளி வேலையும் கொடுக்கவில்லை. தான் வாசிப்பதற்கு ஒரு வேதாகமம் கேட்ட
முல்லருக்கு அதுவும மறுக்கப்பட்டது.
முல்லர் அடைபட்டுக்கிடந்த அறையின் அடுத்த அறையில் இருந்த கொலைக் குற்ற கைதி
மிகவும் சப்தமாக முல்லருடன் பேசிக் கொண்டே இருப்பான். தனது பக்கத்து அறை கைதி
திருட்டுக் குற்றத்தில் மாட்டினவன் என்பதை அவன் கண்டு கொண்டான். அவர்கள்
இருவரும் சப்தமாக சம்பாஷிப்பதை கண்ட சிறைக்கூட கண்காணிப்பாளன் அவர்கள்
இருவரையும் ஒரே அறையில் அடைக்க உத்தரவிட்டான். முல்லர் தன்னோடு வந்து சேர்ந்த
தனது புதிய நண்பனுக்கு தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த வீர தீர திருட்டுச்
செயல்களை தனது கட்டுக்கதைகளுடன் ஒன்று சேர்த்து தனது நண்பன் மெச்சிக்கொள்ளும்
வகையில் அவனுக்கு கூறி வந்தார். இந்தவிதமாக அவர்கள் இருவரும் ஒரு வார காலம்
தங்கள் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் மகிழ்வித்து வந்தார்கள். அதின் பின்னர்
இரண்டு கைதிகளும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் பேசிக்கொள்ளாமல் முற்றும்
அமைதியாகிவிட்டார்கள்.

இந்த அமைதியான நாட்களில் ஜியார்ஜ் முல்லர் தனது கடந்த கால தவறான பாவ வாழ்க்கையை
ஒவ்வொன்றாக அலசிப்பார்க்க ஆரம்பித்தார். அப்பாவிடமிருந்த அரசாங்க பணத்தை
திருடியது, அந்த திருட்டு தொழிலில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் தனது 10 ஆம்
பிறந்த நாளில் தனது தந்தையிடம் வசமாக சிக்கிக்கொண்டு அடிபட்ட நாளை எல்லாம்
கண்ணீரோடு நினைவு கூர்ந்தார்.

1822 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 12 ஆம் நாள் ஜியார்ஜ் முல்லரின் சிறைக்கூட சிறிய
அறையின் கதவின் பூட்டு திறக்கப்படுவதை அவர் கவனித்தார்.

"போலீஸ் அலுவலகத்துக்கு நீ வர வேண்டும். என்னைப் பின்பற்றி வா" என்று சிறைக்கூட
வார்டன் அவரை அழைத்துச் சென்றான்.

அங்கே இருந்த போலீஸ் கமிஷனர், முல்லரைப் பார்த்து "உனது தகப்பனார் உனது வழிப்
பிரயாணத்துக்கான செலவுப் பணத்தையும், நீ தங்கியிருந்த விடுதிக்கு நீ செலுத்த
வேண்டிய பணத்தையும், இங்கு சிறைக்கூடத்தில் உனக்கு ஆன செலவு பணத்தையும் அனுப்பி
வைத்திருக்கின்றார். நீ இப்பொழுது சுதந்திரமானவன், உடனே நீ வீட்டுக்குப்
புறப்பட்டுச் செல்" என்று அனுப்பி வைத்தார். அந்தச் சிறைக்கூடத்தில் முல்லர்
திருடர்களோடும், கொலைக்குற்றம் புரிந்த கொலையாளிகளோடும் 24 நாட்கள்
செலவிட்டிருந்தார்.

ஜியார்ஜ் முல்லரின் தந்தை ஹெர் முல்லர் மகனுடைய வரவைக் கண்டு ஆனந்தமடைந்தாலும்
அவரை வீட்டுக்குள் சேர்ப்பதற்கு முன்னால் நையப்புடைத்து விட்டார்.


Post a Comment

1 Comments

  1. மிகவும் நன்றி. சகோதரரே... மிகவும் எளிமையாக ஜார்ஜ் முல்லர் வாழ்க்கை சரிதையை எழுதியுள்ளீர்கள். ஆனால் முழுமையாக வாசிக்கமுடியவில்லையே....பாதிதான் உள்ளது.
    எனக்கு அவருடைய முழு வாழ்க்கை சரிதையை தர முடியுமா

    ReplyDelete