இன்றைய வசனம் :-மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

பரிசுத்த அக்கினி அபிஷேகம்....HOLY FIRE ANOINTING

பரிசுத்த அக்கினியால் அபிஷேகிக்கப்பட்ட மூடி பிரசங்கியார்.

மூடியை தேவன் பல ஆயிரமாயிரம் மக்களுக்கு ஆசீர்வாதமாகவும், அவர்களுடைய உயிர் மீட்சிக்கு ஏதுவாகவும் மிகுந்த வல்லமையாக பயன்படுத்தியதன் காரணம் அவர் பரிசுத்த ஆவியின் அக்கினியால் அபிஷேகிக்கப்பட்டிருந்ததுதான்.

1871 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிக்காகோ நகரத்தில் நடைபெற்ற மூடி பிரசங்கியாரின் ஒரு கூட்டத்தில் ஆனிகூக் அம்மையாரும் அவர்களது சிநேகிதியும் விதவையுமான ஹாவ் ஹர்ஸ்ட் அவர்களும் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனிகூக் அம்மையார் இங்கிலாந்து தேசத்திலிருந்து சமீபத்தில்தான் அமெரிக்காவில் குடியேறியவர்கள். மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்த அவர்கள் மூடியைவிட 10 ஆண்டுகள் வயது முதிர்ந்தவர்கள். சிறந்த தேவ பக்தினி. மக்களுக்கு மிகுதியாக நற்கிரியைகளைச் செய்த அம்மையார். அவர்களை எல்லாரும் "ஆண்டி கூக்" என்று தான் அழைத்தனர். மூடி அன்று பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தனர்.

"நாங்கள் இருவரும் இன்று உங்களுக்காக ஜெபித்துக் கொண்டே இருந்தோம்" என்று அவர்கள் இருவரும் கூட்ட முடிவில் மூடியைப் பார்த்துச் சொன்னார்கள். மூடி அந்த வார்த்தையைக் கேட்டதும் உண்மையில் அவருக்கு எரிச்சலாகத்தான் இருந்தது.

"கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்ட மக்களுக்காக ஏன் ஜெபிக்கவில்லை" என்று மூடி அவர்களைத் திருப்பிக் கேட்டார்.

"உங்களுக்கு பரிசுத்தாவியானவரின் வல்லமை தேவை" என்று அம்மையார் இருவரும் சாந்தமாக அவருக்கு மாறுத்தரம் சொன்னார்கள்.

"எனக்கு வல்லமை தேவையா!" என்று மூடி நாசுக்காக கூறிவிட்டு அப்பால் நகரத் தொடங்கினார்.

ஆனால் அம்மையார் இருவரும் இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால் நமக்கு இனி ஒரு வாய்ப்பு கிடைப்பது முற்றும் கூடாத காரியம் என்று எண்ணியவர்களாக அவரைப் பின் தொடர்ந்தனர். கண்களில் கண்ணீர் நிறைந்தவர்களாக "பரலோக வேட்டை நாய்க்கு" பின்னால் அம்மையார்கள் இருவரும் பயபக்தியாக சென்றனர் என்று மூடி புத்தக ஆக்கியோன் எழுதுகின்றார். அவர்கள் இருவரும் ஆத்திரம் அவசரம் இல்லாமல் பரிசுத்தமான சாந்தத்தோடு என்னைத் தொடர்ந்து வருவதைக் கண்டதும் எனது தேவையை அது சிந்திக்க வைத்தது என்கிறார் மூடி. தொடர்ந்து அவர் "அவர்கள் இருவரையும் என்னை வந்து சந்தித்து இது விசயமாக பேசுங்கள் என்று அழைத்தேன். அப்படியே அந்த அன்பான மக்கள் இருவரும் என்னிடம் வந்து தங்கள் இருதயங்களை உடைத்து ஊற்றி ஜெபித்து எப்படியாவது நான் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேவ சமூகத்தில் மன்றாடினார்கள். அதற்கப்பால் எனக்குள்ளாக ஒரு பெரிய தாகம் ஏற்பட்டது. அந்த தாகம் எனக்குள்ளாக எப்படி ஏற்பட்டது என்று எனக்குத் தெரியாது. அதற்கப்பால் நான் ஒருக்காலும் இல்லாத அளவுக்கு பரிசுத்த ஆவியின் நிறைவை வாஞ்சித்துக் கதறி அழ ஆரம்பித்தேன். தேவ ஊழியத்திற்குத் தேவையான பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் எனக்கு கிடைக்காதபட்சத்தில் நான் உயிர் வாழ்வதைவிட சாவதே நலம் என்ற முடிவுக்கு வந்தேன்" என்று கூறுகின்றார் மூடி.

இதன் பின்னர் 1871 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அதாவது மேற்கண்ட சந்திப்புக்கு 2 மாதங்களுக்குப் பின்னர் மூடி பிரசங்கியார், ஆண்டிகூக் அம்மையாரையும் அவர்களது சிநேதியையும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை பிற்பகலிலும் சிக்காகோ நகரத்திலுள்ள சென்ட்ரல் ஹாலுக்கு வந்து தனக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை தேவன் தரும்படியாக ஜெபிக்க வரும்படியாக அழைத்தார். அப்படியே அம்மையார்கள் இருவரும் பிரதி வெள்ளிக் கிழமைகளிலும் அந்த இடத்திற்கு வந்து ஒருவர் மாற்றி ஒருவர் பலத்த சத்தத்தோடு தேவ சமூகத்தில் மூடிக்காக ஜெபித்தனர். அக்டோபர் 6 ஆம் தேதி மூடியின் இதய கதறல் அளவு கடந்து செல்லவே கண்களில் கண்ணீர் வடிய தரையில் கிடந்து "ஆண்டவரே, என்னை உமது பரிசுத்த அக்கினியால் அபிஷேகம் செய்யும்" என்று அழுது புரண்டார். ஆனால் ஒன்றும் நடந்தது போல தெரியவில்லை. வானம் அவருக்கு முன்பாக வெண்கலம் போலத்தான் இருந்தது. கர்மேல் பர்வதத்தில் பாகால் தீர்க்கத்தரிசிகள் செய்தது போல மூடி எவ்வளவோ சத்தமிட்டுக் கெஞ்சி கதறி அழுதாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை. மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. எனினும் தேவ மனிதன் சோர்ந்து போகாமல் அடுத்த 5 ஆண்டு காலமாக தேவ சமூகத்தில் தொடர்ந்து ஜெபித்து வந்தார்.

5 ஆண்டு காலத்திற்குப் பின்னர் மூடி ஒரு நாள் நியூயார்க் பட்டணத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். நியூயார்க் பட்டணத்தின் உயரமான சாலை மரங்கள் நின்ற ஐந்தாவது பெரு வீதி வழியாக பகற் காலத்தின் நல்ல வெளிச்சத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அது ஜன நெருக்கமான சந்தடி நிறைந்த ஒரு வீதியாகும். தினசரி செய்தி தாட்களை விற்கும் பையன்கள் சத்தமிட்டு தங்கள் நாளேடுகளை விற்றுக் கொண்டிருந்தனர். குதிரைகள் இழுத்துக் கொண்டு ஓடும் சாரட்டு வண்டிகள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. மக்கள் கூட்டம் மூடியை நெருக்கிக் கொண்டு போவதும் வருவதுமாகவிருந்தனர். மூடி தன்னை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்தவராக தனது காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். தனக்கும் தன்னை ஆட்கொண்ட கர்த்தருக்கும் எந்த ஒரு சிறிய தடையின் இடை வெளியும் இல்லை என்று அவர் தனக்குள் உறுதி செய்து கொண்டார். அந்த வினாடியில்தானே பரிசுத்த ஆவியானவரின் நிறைவான பிரசன்னம் மூடியுடைய இருதயத்துக்குள் ஒளி வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. "சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே எனது அருகில் வந்து விட்டதாகவும் எனக்கு உடனடியாக ஒரு தனிமை தேவை என்பதையும் நான் அத்தியந்தமாக உணர்ந்தேன்" என்கின்றார் மூடி. உடனே அவர் அருகிலிருந்த அவரது நண்பர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்று வாசலில் இருந்த ஒருவரிடம் தனது விலாச கார்ட்டை கொடுத்து நண்பனுக்கு அனுப்பினார். உடனடியாக நண்பன் ஓடோடி வந்து மூடியை அன்பொழுக வரவேற்று ஒரு தடபுடலான விருந்துக்கு ஆயத்தம் செய்தான். "எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் தனிமையில் சென்று என்னை மாத்திரம் உள்ளே வைத்து அறையைப் பூட்டிக் கொள்ள ஒரு தனித்த அறை வேண்டும்" என்று மூடி தனது நண்பனிடம் கேட்டார். நகைச்சுவையாக பேசும் மூடி பிரசங்கியார் இந்தச் சமயமும் தன்னை கேலி செய்வதற்காக இப்படிச் சொல்லுகின்றார் என்று நண்பன் எண்ணினான். ஆனால் அன்று நடந்தது வேறு.

தனித்த அறைக்குள் மூடி சென்று அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு அங்கு இருந்த இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். அந்த அறையே தேவனுடைய அக்கினியால் நிறைந்திருப்பதைப்போல மூடி உணரவே அமர்ந்திருக்க இயலாமல் அந்த தெய்வீக அக்கினியில் மூழ்கியவராக தரையிலே விழுந்து புரண்டார். மறுரூப மலையில் தமது அன்பான சீடர் மூவருக்கு கொடுத்த அதே பரலோக அக்கினி அனுபவத்தை அன்று அவர் பெற்றதாக பின்பு கூறினார். அதைக் குறித்து அவர் சொல்லும்போது "தேவன் தம்மை அன்று எனக்கு வெளிப்படுத்தினார். அவருடைய பிரவாகிக்கும் பேரின்பப் பெருக்கு என் உள்ளத்துக்குள் பாய்ந்தோடியது. அந்தப் பரலோக ஆனந்தத்தை தொடர்ந்து அனுபவித்து மகிழ எனக்கு இயலாத காரணத்தால் "ஆண்டவரே, உமது கரத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும், இல்லாவிட்டால் உமது பரலோக சந்தோசத்தின் மிகுதியால் நான் செத்துப் போவேன்" என்று தேவனிடம் அபயமிட வேண்டியதாயிற்று" என்றார். மூடி தங்கியிருந்த வீட்டிற்குப் பக்கத்திலிருந்த தேவாலயத்தின் மணி கால், அரை, முக்கால், ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணி என்று அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் மூடி வெளியே வரவில்லை. நீண்ட மணி நேரங்களுக்குப் பின்னர் "பைத்தியக்கார மூடி" என்று அழைக்கப்பட்ட அவர் "தேவனுடைய பரிசுத்த மனிதன் மூடி" என்ற பக்த சிரோன்மணியாக அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்.

மோசே சீனாய் மலையில் தேவனோடு 40 நாட்கள் தனித்திருந்துவிட்டு கீழே இறங்கி வரும்போது இஸ்ரவேல் மக்கள் அவரது முகத்தை பிரகாசிப்பதாக கண்டதுபோல அவருடைய நண்பரும், குடும்பத்தினரும் மூடியின் முகத்தில் வீசிய ஒளியை அன்று கண்டு தேவனை மகிமைப்படுத்தினார்கள். மூடியின் மாம்ச சரீரம் தேவ ஆவியானவருக்குமுன்பாக மெழுகு போல உருகி அந்த மாம்ச சரீரம் தேவ ஆவியானவர் தங்கும் ஆலயமாக வடிவமைக்கப்பட்டது. அவருடைய கொந்தளித்துக் கொண்டிருந்த மனம் தேவ சமாதானத்தால் நிரம்பி வழிந்தது. தனது விருப்பமோ இல்லை தனது வாஞ்சையோ அல்ல, தேவனுடைய ஆளுகைக்கு முற்றும் கையளித்த ஒரு குழந்தையாக இப்பொழுது அவர் காணப்பட்டார். தனது வழியை தானே பார்த்து தான் தெரிந்து கொண்ட பாதையில் நடவாமலும், பெருமை தன்னை ஆழுகை செய்யாமலும், தேவ சித்தம் ஒன்று மட்டுமே தன்னில் நிறைவேறத்தக்கதாக தேவன் தன்னை நடத்திச் செல்லவும், தேவைகளைச் சந்திக்கவும் ஆண்டவரது கரங்களில் மூடி அன்று விழுந்தார். இப்பொழுது மூடியின் தேவ ஊழியத்தில் எந்த ஒரு வறட்சியும் காணப்படவில்லை. "காலமெல்லாம் தண்ணீரை நானே கஷ்டப்பட்டு இழுத்து அதை சுமந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுதோ என் உள்ளத்தில் பொங்கும் ஜீவ நதியின் பேரின்ப பெருக்கில் நான் சுமந்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்" என்று தனக்குக் கிடைத்த பரிசுத்த அக்கினி அபிஷேகத்தைக் குறித்து மூடி சொன்னார். அதற்கப்பால் அவரது தேவ ஊழியங்களில் ஒரு பெரிய உயிர் மீட்சி அலை வீசத் தொடங்கியது.

Post a Comment

0 Comments